மலேசியாவின் சிலாங்கூரில் துணிக்கடை ஒன்று மக்களிடம் பிரபலமாகும் நோக்கில் ஒரு ரிங்கட்டிற்குப் புது உடை என்று விளம்பரம் செய்திருந்தது.
விற்பனை நாளான சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று உடைகள் வாங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடையில் குவிந்தனர்.
ரமலான் மாதத் தள்ளுபடி என்று கூறி, முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் ஒரு ரிங்கிட்டுக்கு 1 புது உடை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் கடைக்குள் நுழைய அலைமோதினர்.
கைப்பேசிகள், உடைகள் என பல பரிசுப்பொருள்களும் வாடிக்கையாளர்களுக்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டதால் கடை இருந்த வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு கூட்டம் அதிகரித்தது.
மக்கள் கூட்டம் அதிகமானதால் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கடையில் இருந்த சிலருக்குக் காயம் ஏற்பட்டது, அதே நேரம் சில வாடிக்கையாளர்கள் தங்கள் கைக்குக் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியானது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அக்கடை காலை 11:45 மணிவாக்கில் அடைக்கப்பட்டது.