மலேசியாவில் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் இருவர் திருடிய சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்
சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி மலாக்கா மாநிலத்தில் உள்ள பிளாசா மாகோட்ட ஹோட்டலில் நடந்ததாகவும் பாதிக்கப்பட்ட பயணி 42 வயது இந்தோனிசீயப் பெண் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
31 வயதான இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கிட்டத்தட்ட 550 வெள்ளியை அந்த பெண் பயணியிடம் இருந்து திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கூடுதலாக பெண்ணின் கடவுச்சீட்டையும் அவர்கள் அபகரிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணி ஏப்ரல் 4ஆம் தேதி காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
தற்போது அந்த இரண்டு அதிகாரிகளும் பிணையில் வெளியாகியுள்ளனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.