மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான பாலியல் புகார் தொடர்பில் போலிசார் அவரிடம் நேற்று ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பிற்பகல் 3.40 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள போலிஸ் தலைமையகமான புக்கிட் அமானுக்குச் சென்ற திரு அன்வார், மாலை 6 மணியளவில் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டது.
திரு அன்வார் தம்மைப் பாலியல் உறவுக்கு அழைத்ததாக அவரது முன்னாள் உதவியாளர் முகம்மது யூசோஃப் ராவுத்தர் புகார் அளித்துள்ளதை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தம் மீதான இந்தக் குற்றச்சாட்டை திரு அன்வார் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
திரு மகாதீர் முகம்மதுக்குப் பிறகு மலேசிய பிரதமராக திரு அன்வார் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரு அன்வார் மீதான திரு யூசோஃப்பின் குற்றச்சாட்டு, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கில் இடம்பெறும் முயற்சி என அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
முன்னாள் உதவியாளர் ஒருவருடன் ஓரின உறவு கொண்டதாகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்தை திரு அன்வார் சிறையில் கழித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலில் திரு அன்வாரின் கெஅடிலான் கட்சி இடம்பெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஆனாலும், திரு அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பது எப்போது என்பதை டாக்டர் மகாதீர் தெளிவாகக் கூறவில்லை என்பதாலும் கெஅடிலான் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுவதாலும் அரசியல் பதற்றநிலை தணிந்தபாடில்லை.
இதனிடையே, திரு அன்வார் தம்மைத் தாக்கியதாகவும் தம்முடன் உறவுகொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் திரு யூசோஃப் புகார் அளித்திருப்பது, அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புகாரைத் தொடர்ந்து கடந்த வாரம் போலிஸ் திரு யூசோஃப்பிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை விரைவில் நிறைவுபெறும் என நம்புவதாக திரு அன்வார் நேற்று கூறியதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே, புகார் அளித்த திரு யூசோஃப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை உட்பட பல கோணங்களில் போலிசார் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity