மலேசியாவின் குவாந்தானுக்கு அருகில் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் இருவர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.
நேற்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருவர் 43 வயது முகமது ஷோரிஃபுல்; மற்றவர் 27 வயது ஜுல்ஹாஸ் ரஹ்மான்.
அந்த கட்டுமானத் தளத்தில் சாக்கடைக் குழாய் பதிக்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது நேற்று (மார்ச் 5) மாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
“ஆறு அடி ஆழ குழியில் இந்த மூவரும் பணிபுரிந்துகொண்டிருந்தனர். இரண்டு மண் அகழும் இயந்திரங்கள் அந்தக் குழிக்கு மேலே இயக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
“மண் அகழ்வு பணியின்போது அந்தக் குழியின் ஓரத்தில் சேகரிக்கப்பட்ட மண் குழிக்குள் விழுந்தது,” என்று டெர்மர்லோ மாவட்ட போலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
குழிக்குள் இருந்த மூவரில் ஒரு ஊழியர் குழிக்குள் விழுந்த மண்ணிலிருந்து இழுத்து மீட்கப்பட்டார். மற்ற இருவரையும் மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.
அதனையடுத்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஷோரிஃபுல்லின் உடலை மாலை 4.45 மணிக்கும் ஜுல்ஹாசின் உடலை மாலை 5 மணியளாவிலும் குழியிலிருந்து வெளியில் கொண்டு வந்தனர்.
#மலேசியா #வெளிநாட்டு ஊழியர் #விபத்து #தமிழ்முரசு