மலேசியாவின் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் இம்மாதம் மத்தியில் உச்சத்தைத் தொடும் என்றும் அந்நாட்டில் கிருமித்தொற்று குறைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றும் உலக சுகாதார நிறுவனம் இன்று (ஏப்ரல் 2) தெரிவித்தது.
மலேசியாவில் இன்று 208 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் மேலும் ஐந்து உயிரிழப்புகளும் உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்தம் 3,116 பேர் கிருமி பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்; 50 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தென்கிழக்காசிய பகுதியில் ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவான நாடு மலேசியா என்று கூறப்படுகிறது.
கிருமி பரவலைக் கட்டுப்படுத்த மலேசியா பயணக் கட்டுப்பாடுகளையும் நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில், கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மலேசியாவில் கிருமித்தொற்றுக்காக மருத்துவ சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மத்தியில் உச்சத்தைக் காணும் என்று உலக சுகாதார நிறுவனம் முன்னுரைப்பதாக நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் யிங் ரூ லோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மின்னஞ்சல்வழி தெரிவித்தார்.
நிறுவனத்தின் முன்னுரைப்புகள் மாற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் லோ, நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பாதுகாப்பான நடவடிக்கைகளைக் கைவிட்டாலும் குறைந்து வரும் கிருமித்தொற்றின் போக்கு மாறிடலாம் என்றார்.
தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளால் புதிதாக பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்துவருவதாக மலேசியாவின் சுகாதார அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
இந்நிலையில் கெடா, சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், திரங்கானு ஆகிய ஐந்து மாநிலங்களும் இவ்வாண்டு நோன்பு மாத உணவுச் சந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றன.
இருப்பினும் இந்த விவகாரத்தின் தொடர்பில் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, இம்மாதம் 14ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் அது குறித்து சுகாதார அமைச்சு முடிவு செய்யும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.
மேலும், நாளை முதல் மலேசியாவுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்களுக்கு தடைகாப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த சோதனைச்சாவடி வழியாக நாட்டுக்குள் நுழைந்தாலும் அவர்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் தடைகாப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார் அவர்.
இந்தியாவில் சிக்கித் தவித்த 359 மலேசியர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் திரு சப்ரி குறிப்பிட்டார். திருச்சியில் இருந்து அவர்கள் இன்று மாலை இரண்டு ஏர் ஏஷியா விமானங்கள் மூலம் மலேசியாவுக்குத் திரும்பினர்.
மலேசியாவில் நடப்பில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 4,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 100க்கு மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
#மலேசியா#கொவிட்