கோலாலம்பூர்: கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய 58 பேருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்காலிகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியவர்களுக்காக 11 தற்காலிகச் சிறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
சாலைகளில் போலிசாராலும் ராணுவ அதிகாரிகளாலும் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளில் பிடிபட்டோருக்கு 1,000 ரிங்கிட் வரை அபராதமும் குறுகிய கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன. கும்பல்களாகக் கூடியவர்களையும் அதிகாரிகள் பிடித்தனர். தடுத்து வைக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர். மலேசியாவின் சிறைத் துறையின்கீழ் பயிற்சிக் கழகங்களாக இருந்த இடங்கள் தற்காலிகச் சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமையிலிருந்து இவ்விடங்கள் தற்காலிகச் சிறைகளாக இயங்கி வருகின்றன.
ஏற்கெனவே உள்ள சிறைகளில் இவர்களை அடைத்துவிட்டால் சிறைகளில் கொரோனா கிருமித்தொற்று ஏற்படக்கூடும் என்பதால் தற்ககாலிகச் சிறைகள் அமைக்கப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.
ஜோகூர் மாநிலத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 18ஆம் தேதியிலிருந்து ஜோகூர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய 3,073 பேர் சிக்கியதாக ஜோகூர் போலிஸ் ஆணையர் அயூப் கான் மைடின் பிச்சே தெரிவித்தார்.
இவர்களில் 66 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அரசாங்க ஊழியர் கடமையாற்ற இடையூறு விளைவித்த குற்றத்தின்கீழ் கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதுமட்டுமல்லாது, தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ் அவர்கள் குற்றம் சாட்டப்படலாம்.
இந்தக் குற்றச்சாட்டின்கீழ் அவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தீங்கு விளைவிக்கக்கூடிய தொற்று அல்லது நோயை பரப்பிய குற்றத்தின்கீழ் கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் மூன்றாவது நிலை தற்போது நடப்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஆணையர் அயூப், கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்
கிருமிப் பரவலைத் தடுக்க வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக பினாங்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் இருவர் இணையம் வழி சூதாட்டத்தில் ஈடுபட்டததற்காகப் பிடிபட்டனர்.
இணையம் வழி சூதாட்டத்துக்கு இருவரும் பயன்படுத்திய பொருட்களையும் அவர்களிடம் இருந்த பணத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர். சாலைகளில் சோதனைச்சாவடிகளை அமைத்து சோதனை நடத்தியபோது வீட்டைவிட்டு வெளியே வந்ததற்கான காரணத்தை விளக்க முடியாமல் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலிசார் தெரிவித்தனர். நண்பர்களைச் சந்திக்க வெளியே வந்ததாக சிலர் கூறியதை போலிசார் சுட்டினர்.
கைது செய்யப்பட்ட ஏழு பேரும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மலேசியாவில் மேலும் 51 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 5,742 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருமித்தொற்று காரணமாக மலேசியாவில் 98 பேர் மாண்டுவிட்டனர்.