சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய ஊழியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் நாள் ஒன்றுக்கு அத்தகைய 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அவர்கள் அவ்வாறு மலேசியாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி கோரி சிங்கப்பூரில் இருக்கும் மலேசிய தூதரகத்தில் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சஃப்ரி யாக்கோப் இன்று (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளார்.
ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வைத்தியநாதன் திங்கட்கிழமை முதல் இது நடப்புக்கு வரும் என்று அறிவித்ததையடுத்து திரு இஸ்மாயில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மலேசியாவுக்குத் திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் இரண்டு வாரங்களுக்குத் தங்க வைக்கப்படுவர்.
சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் மலேசியர்கள் தாங்கள் திட்டமிட்டுள்ள பயண தேதிக்கு, குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பாக stmsg@mhc.org.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
பெயர், அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண், பயண தேதி ஆகியவற்றுடன் சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான அனுமதிச்சீட்டு, நீண்ட காலம் தங்கியிருக்க அனுமதிக்கும் அட்டை அல்லது நிரந்த்ரவாசத் தகுதி அட்டை அல்லது மாணவர் அனுமதி அட்டை போன்றவற்றில் ஒன்றை மின்னஞ்சல் வழியாக அனுப்பவேண்டும்.
அவர்கள் மலேசியாவுக்குத் திரும்புவதற்கு வழங்கப்படும் அனுமதி, மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும். அதை மலேசிய குடிநுழைவு அதிகாரிகளிடம் அவர்கள் காண்பிக்க வேண்டும் என்றும் திரு வைத்தியநாதன் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர் அவர்களது வீட்டில் தாமாக தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் அரசாங்க தனிமைப்படுத்தப்படும் நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் திரு வைத்தியநாதன் முன்பு குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களில் இதுவரை சுமார் 900 பேர் தாயகம் திரும்புவதற்கு விண்ணப்பித்திருப்பதாக திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் நடப்பில் இருக்கும் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலான மலேசிய ஊழியர்கள் தாயகத்துக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மலேசியாவில் இன்று புதிதாக 38 பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று உறுத்செய்யப்பட்டுள்ளது; புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சின் பொதுச் செயலாளர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலேசியாவில் இதுவரை 5,780 பேருக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது; கொவிட்-19ஆல் அங்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர்.