மலேசியாவில் இன்று (மார்ச் 31) மேலும் 140 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு புதிதாக 6 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனையடுத்து கொவிட்-19ஆல் மலேசியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆகியுள்ளது; அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,766.
இதுவரை 537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட மலேசிய சுகாதாரத்துறையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சிகிச்சைபெற்று வருவோரில் 94 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்த முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாவதை அவர் சுட்டினார்.
கடந்த மாதத்தில் சுகாதாரத் துறையும் மற்ற அமைப்புகளும் எடுத்து வரும் நடவடிக்கைகளின் பலனை இது காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று பொதுமக்களுக்கு நினைவூட்டிய அவர், அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் உகந்த பலனைத் தருகின்றனவா என்பதை இந்தக் காலகட்டத்தில் அறிய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக, 26லிருந்து 30 வரை, 56லிருந்து 60 வரை என இரு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்தோர் அதிக அளவில் கொரோனா தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதைத் தரவுகள் காட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், மலேசியாவின் மாமன்னர், அரசி ஆகியோரின் அரச ஊதியத்தை மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு விட்டுக்கொடுப்பதற்கு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 சூழலைச் சமாளிக்க அரசாங்கத்தின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவை மாமன்னர் எடுத்திருப்பதாக அரண்மனையின் நிதியதிகாரின் அகம்து ஃபாடில் ஷம்சுதின் தெரிவித்தார்.
மலேசிய பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரின் தங்களது இரண்டு மாத ஊதியத்தை கொவிட்-19 நிதிக்காக விட்டுக்கொடுத்திருப்பதையடுத்து இந்த முடிவை மாமன்னர் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.