மலேசியாவின் கெடாவிலுள்ள சிறைச்சாலை, சாபா மாநிலம் போன்றவற்றில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, மலேசியாவில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது.
கொவிட்-19 பாதிப்புக்குள்ளான அமைச்சர் ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மலேசியாவின் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
உள்ளூர் சமூகத்தில் பெருமளவு பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதே நமது முன்னுரிமை. பொதுவான எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்றார் திரு நூர் ஹிஷாம்.
நேற்று மலேசியாவில் 432 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றுள் 231 சம்பவங்கள் கெடாவிலும் 130 சம்பவங்கள் சாபாவிலும் பதிவானவை.
இதற்கிடையே, சாபாவிலிருந்து மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கும் சரவாக், லபுவான் போன்ற பகுதிகளுக்கும் செல்ல நாளை முதல் வரும் 20ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
அவசரகாலம், மரணம், அத்தியாவசியச் சேவைகள் போன்றவற்றுக்கு அனுமதியுடன் பயணம் செய்யலாம். அவர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.