மலேசியாவின் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தமக்கு போதுமான அளவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியதன் தொடர்பில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த புகாரின் விசாரணைக்காக திரு அன்வாருக்கு மலேசிய போலிஸ் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நாளை அவர் காவல் நிலையத்தில் முன்னிலையாவார் என்று கூறப்பட்டது. 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் தமக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் ஆதரவு தொடர்பிலான ஆவணங்களை திரு அன்வார் மாமன்னரைச் சந்தித்து வழங்கினார்.
அம்னோ கட்சித் தலைவர் அகமது ஸாகிட் ஹமிடி வரும் நாட்களில் காய்களை நகர்த்துவதன் அடிப்படையில் திரு முகைதீன் யாசினின் பிரதமர் பதவிக்காலம் இருக்கும் என்று வட்டாரச் செய்தியாளர் லெஸ்லி லோப்பெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஆளும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப்போவதாக அம்னோ கட்சி மிரட்டியிருப்பதற்கு பிரதமர் முகைதீன் யாசினின் பாஸ் கட்சி விளக்கம் கோரியுள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்று படுவேகமாக அதிகரித்து வரும் வேளையில், அரசியல் தலைவர் பதவிப் போரில் ஈடுபட்டிருப்பது மலேசிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.