மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசினின் தேசிய முன்னணி கூட்டணி அரசாங்கத்திற்கு மலேசிய இஸ்லாமியக் கட்சி தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆளும் தேசிய முன்னனிக் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை என்று அம்னோ கட்சி அறிவித்ததையடுத்து இன்று, மாரத்தான் போல தொடர் கட்சிக்கூட்டங்கள் இடம்பெற்றன.
கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்திய, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான், பிரதமரின் தலைமைத்துவத்தைத் தற்காக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். “முஹைதீன் யாசின் தலைமைக்கு பாஸ் தனது கருத்துவேறுபாடற்ற விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. பெரிகத்தான் நேஷனல் அரசாங்கத்துக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆத ரவை வழங்குவார்கள்,” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கடந்த மாதம் தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாகக் கூறியதை அடுத்து, நாடாளுமன்றத்தில் முஹைதீனின் கட்டுப்பாடு குறித்த கேள்வி எழுந்தது.
அன்வார் தனது பலத்தை நிரூபிக்காத நிலையில், நாட்டில் அவசரநிலையை நடப்புக்குக் கொண்டு வர விரும்பிய முஹைதீனின் திட்டத்தை மாமன்னர் அப்துல்லா அகம்மது ஷா நிராகரித்து விட்டார்.
எனினும், தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் ஏற்கெனவே 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களின் ஆதரவையே கொண்டுள்ள முஹைதீனின் கூட்டணியில் பலம் இன்னும் ஆட்டம் காணுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.