மலேசிய மாமன்னரையும் பிரதமர் முகைதீன் யாசினையும் அவமதித்ததாகக் கூறப்பட்ட புகார் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் இருவரை போலிஸ் விசாரித்து வருகிறது.
பிரதமரை அவமதிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லோக்மன் நூர் ஆடம் ஒருநாள் காவலில் வைத்து, விசாரிக்கப்பட்டார். பரவலாகப் பகிரப்பட்ட அந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய்ய அவர் பயன்படுத்திய மின்னணுக் கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, முந்தைய பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த முஜாகித் யூசோஃப் ராவா, மாமன்னரை இழிவுபடுத்திவிட்டதாக விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் பிரதமராக முகைதீன் யாசினை நியமித்ததை அடுத்து, மாமன்னரை அவமதிக்கும் வகையில் அவர் கருத்துரைத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், போலிஸ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்று முஜாகித் கூறி இருக்கிறார்.