மின்னியல் தொழில்நுட்பரான 27 வயது டி.சுகு, பாதுகாவலராகப் பணிபுரிந்த 22 வயது எஸ். விக்னேஸ்வரன், விநியோக ஓட்டுநரான 23 வயது பி. கோகிலன், வேலையில் இல்லாத 23 வயது ரவிந்திரன் ஆகியோர் மீது இன்று மலேசிய நீதிமன்றத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.
ஆய்வாளரான டாக்டர் வான் ஹாசன் வான் எம்போங் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி அதிகாலை 3.35 முதல் 4 மணிக்குள் இந்தக் கொலையை அவர்கள் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் டாக்டர் வான் ஹாசனின் வீட்டுக்குள் இரு கொள்ளையர்கள் நுழைந்தனர். அவர்களுடன் மூண்ட சண்டையில் அவரைத் தாக்கியதில் அவர் பின்னர் உயிரிழந்தார்.
குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 302, 34ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அந்த நால்வரில் ஒருவரான டி.சுகுவின் தாயார் நீதிமன்றத்துக்கு வெளியில் நின்று கதறினார். தம் மகன் நல்லவர் என்றும் தம்மைக் கவனித்துக்கொள்ளும் ஒரே பிள்ளை அவர்தான் என்றும் தம் கதறலுக்கிடையே தெரிவித்தார்.
இந்த நால்வரும் மற்றொரு அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது கொள்ளைக் குற்றமும் சாட்டப்பட்டது.
முகமது முஸாஃபர் ஸுல்கிஃப்லி மார்டின் எனும் 33 வயது பொறியாளரிடம் கத்தி, சுத்தியல் போன்றவற்றைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 38,000 ரிங்கிட் இழப்பு அவருக்கு ஏற்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவம் அதே நாளில் அதிகாலை 4.12 முதல் 5.30க்கு இடைப்பட்ட நேரத்தில் தாம டியாரா டிட்டிவாங்சா பகுதியில் நிகழ்ந்தது.
இரண்டாவது கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு 21 முதல் 29 வயதுக்குட்பட்ட 10 சந்தேக நபர்கள் கைதாகினர்.
கொலை செய்யப்பட்டவரின் பணப்பையை, குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர் ஒருவர் வைத்திருந்ததையடுத்து, இந்த நால்வரும் அடையாளம் காணப்பட்டனர்.