லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அம்னோ கட்சியின் தலைமைப் பொருளாளரும் மலேசியாவின் முன்னாள் அமைச்சருமான அட்னான் மன்சூருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக பதவி வகித்தபோது உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து அட்னான் 2 மில்லியன் ரிங்கிட் ($660,000) லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டது.
70 வயது அட்னானுக்கு 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து அட்னான் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதமும் நிலுவையில் உள்ளது.
தமக்கு எதிராக அரசியல் சதி நடந்திருப்பதாக அட்னான் கூறியதை மலேசிய உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது ஸைனி மஸ்லான் ஏற்க மறுத்தார்.
அட்னான் லஞ்சம் வாங்கியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.