தீபாவளித் திருநாள் நெருங்கிவிட்டதால் கொவிட்-19 கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனை வர்த்தகர்கள் முன்னேற்றத்திற்காக காத்திருக்கின்றனர். கடந்த ஓராண்டாக சரிந்துள்ள விற்பனை இனி அதிகரிக்கும் என்பதே கடைக்காரர்களின் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும்..
கிருமிப்பரவலுக்கு முன் வசதியுள்ள மலேசியர்கள் தீபாவளி பொருட்களை வாங்க இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் இப்போது அவர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் மலேசியக் கடைகள் ஆதாயம் அடைய வாய்ப்பு இருப்பதாக மலேசிய கடைக்காரர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அமீர் அலி மைடின் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவில் பொருள் விற்க முறையான அனுமதியின்றி நுழையும் சில இந்தியர்களால் கவலையடைந்த மலேசிய கடைக்காரர்கள் இப்போது நிம்மதியுடன் இருப்பதாக அவர் கூறுகிறார்.
தீபாவளிக்கு அடுத்து, கிறிஸ்மஸ், சீனப் புத்தாண்டு என வரிசையாக வரும் கொண்டாட்டங்களால் விலைக்கழிவுகள் உள்ளிட்ட சலுகைகள் மூலமாக கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களை ஈர்க்க முயல்கின்றனர். நாட்டு எல்லைகள் தொடர்ந்து மூடியிருந்தாலும் மலேசியர்கள் உள்ளூரிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டு செலவு செய்வார்கள் என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
ஆயினும், பொருட்கள் சிலவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாக சில பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என கடைக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
கிருமிப்பரவலுக்கு முந்திய காலகட்டத்தில் இருந்ததுபோல விற்பனை சூடுபிடிக்காது என்றாலும் ஏதாவது ஒரு முன்னேற்றத்திற்காக வழிமீது விழிவைத்து அவர்கள் காத்திருக்கின்றனர் .