மலேசியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் ஷா அலாமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில், மூன்று ஆடவர்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களின் சடலங்கள் திங்கட்கிழமை (டிசம்பர் 20) அன்று அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
பாஹாங்கின் குவாந்தானில் ஒருவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) அன்று கண்டெடுக்கப்பட்டது.
பாஹாங்கில் பத்து பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பாஹாங்கில் உள்ள சில ஆறுகளில் நீர்மட்டம் இன்னும் அபாய அளவில் இருப்பதாக மாநில அதிகாரிகளை மேற்கோள் காட்டி மலே மெயில் தெரிவித்தது.
பாஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பேராக், ஆகிய ஐந்து மாநிலங்களில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் மட்டும் சுமார் 32,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில முதல் அமைச்சர் அமீருதீன் ஷா திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர்கள் ஒன்பது மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 162 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனனர்.
கிள்ளானில் மட்டும் 18,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
வெள்ளத்தால் மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் தங்கள் அன்புக்குரிய சொந்தங்களையும் நண்பர்களையும் தேடுவதற்கு மலேசியர்கள் பலர் சமூக ஊடகங்களில் உதவி நாடி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) பெய்யத் தொடங்கிய பெருமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
மழை குறித்த சரியான தகவல்களை அளிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படும் புகார்களை மலேசிய வானிலை ஆய்வுத் துறை மறுத்துள்ளது.
நூறாண்டுக்கு ஒரு முறை பெய்யும் மழை என்று அந்தப் பெருமழையை மலேசிய சுற்றப்புற அமைச்சு அதிகாரிகள் வருணித்தனர்.