நூறாண்டுக்கு ஒரு முறை பெய்த மழை உண்டாக்கிய பெரும் சேதத்திலிருந்து மீள, பல மலேசியர்கள் கைகோத்துச் செயல்பட்டு வருகின்றனர்.
பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு ராணுவத்தார் உதவி வரும் அதே வேளையில் பொதுமக்களும் தன்னிச்சையாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிலாங்கூர், பாஹாங் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, பினாங்கு, பேராக் போன்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று மீட்புப் பணிகளில் உதவினர்.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள மலேசியர்கள், சுத்தம் செய்யும் பணிகளிலும் மறுசீரமைப்புப் பணிகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக உதவ முன்வந்துள்ளனர்.
வெள்ளத்தைச் சமாளித்து சேதத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் திறனுடன் செயல்படவில்லை என்ற பெருமளவுப் புகார்கள் எழுந்த நிலையில், தனிநபர்கள் தங்கள் பங்கைச் செய்து வருகின்றனர்.
ஷா அலாமில் வசிக்கும் இல்லத்தரசி இக்கா ஃபிக்ரி, பாதிக்கப்பட்டோரின் துணிகளை இலவசமாக சலவை செய்து தருகிறார்.
"என்னிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை. ஆனால் உழைப்பைத் தர முடியும்," என்றார் அவர்.
நாமே நம்மைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் அவரை உந்தியுள்ளது.
கிள்ளானில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவையும் பொருள்களையும் வழங்க விரும்புவோருக்கு இலவச விநியோகச் சேவைகளை அஸான் மாட் அலிஃப் என்பவர் வழங்கி வருகிறார்.
தம்மால் இயன்ற குறைந்தபட்ச உதவி இதுதான் என்கிறார் அவர்.
சமூகநல அமைப்புகளும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்கள், உணவு போன்றவற்றைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றன.