மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலில் இரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்தது. திரு நஜிப்பின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதகாவும் கூறப்பட்டது.
திரு நஜிப் இருக்கும் காஜாங் சிறையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் எப்போது மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்படுவார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
1எம்டிபி ஊழல் விவகாரத்தில் திரு நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. சென்ற மாதம் 23ஆம் தேதி அவர் தனது சிறைத் தண்டனையை தொடங்கினார்.
இந்நிலையில், திரு நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர் லஞ்ச வழக்கு ஒன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.