மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் மனைவி ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருவாட்டி ரோஸ்மா மன்சூர்க்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 970 மில்லியன் ரிங்கிட் ($303 மில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் அவரது கணவர் நஜிப் ரஸாக் 1எம்டிபி விவகாரத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
70 வயதான திருவாட்டி ரோஸ்மா 194 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் குற்றவாளி என மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சரவாக் மாநிலத்தில் சூரிய சக்தி திட்டத்தை நிறுவனம் ஒன்று பெறுவதற்கு திருவாட்டி ரோஸ்மாவிற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், திருவாட்டி ரோஸ்மா கண்ணீர் வடிய தொடங்கினார். தான் லஞ்சம் பெற்றதை யாரும் பார்க்கவில்லையென்றும், தீர்ப்பு தனக்கு ஆழ்ந்த சோகத்தை தருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது திருவாட்டி ரோஸ்மா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மேலும் 17 பணமோசடி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் உள்ளன.
சென்ற வாரம் அவரது கணவர் நஜிப்புக்கு மலேசியாவின் 1எம்டிபி நிதியை மில்லியன் கணக்கில் தவறாகக் கையாண்டதற்காக 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.