ஊழல் குற்றம் புரிந்ததற்காக விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள காஜாங் சிறையில் சிறைத் தண்டனையை அவர் தொடங்கியுள்ளார்.
ஆனால் அரச மன்னிப்பு கிடைக்காவிட்டாலும் அவர் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருக்கக்கூடும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். நன்னடத்தை காரணமாக அவரது தண்டனைக் காலம் குறைக்கப்
படக்கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி அவர் சிறையில் இரண்டு இரவுகளைக் கழித்துவிட்டார். மலேசியாவின் உயர் நீதிமன்றம் நஜிப்புக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறையை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உறுதிசெய்தது. 1எம்டிபியின் முன்னாள் பிரிவான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிலிருந்து பணம் கையாடிய குற்றத்துக்காக நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறையுடன் 210
மில்லியன் ரிங்கிட் ($65.3 மில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறை வாழ்க்கை தமது தந்தைக்குப் புதிது என்றும் அதனுடன் அவர் பழகி வருவதாகவும் நஜிப்பின் மகளான நூர்யானா நஜ்வா நேற்று முன்தினம் இரவு இன்ஸ்டகிராமில் பதிவிட்டார். பணிகள் நிறைந்த வாழ்க்கைமுறையுடன் ஒப்பிடும்போது சிறைவாசம் முற்றிலும் மாறுபட்டதை அவர் சுட்டினார்.
"எனது தந்தை ஆரோக்கியமாக இருக்கிறார். அத்துடன் அவர் துவண்டுவிடாமல் மனவலிமை
யுடன் உள்ளார்," என்று நூர்யானா தெரிவித்தார். சிறைக் கைதி என்ற முறையில் நன்னடத்தை காரணமாக அவரது தண்டனைக் காலம் மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படலாம் என்று அறியப்படுகிறது. இதற்கு அவர் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்று மூத்த குற்றவியல் வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் தெரிவித்தார்.
ஆனால் தமக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் செலுத்த தவறினால் அவருக்குக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அபராதத் தொகையை அவர் செலுத்தாவிடில் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவதற்குள் அபராதத் தொகையை நஜிப் செலுத்தலாம் என்று மற்ற வழக்
கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நன்னடத்தை காரணமாக அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டால் அபராதத் தொகையைச் செலுத்திய பிறகே அவர் வெளியில் வர முடியும் என்று மலேசிய ஊடகத்திடம் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு சலீம் பஷீர் பாஸ்
கரன் தெரிவித்தார். பரோலில் வெளியே வர நஜிப் விண்ணப்பம் செய்யலாம் என்று மற்றொரு வழக்
கறிஞரான திரு ரமேஷ் என்.பி. சந்திரன் கூறினார். பரோலில் வெளியே வரும் சிறைக் கைதிகள் பரோல் அதிகாரி மேற்பார்வையின்கீழ் இருப்பர். பரோல் விதிமுறைகளை மீறினால் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிவரும்.
இதற்கிடையே, அரச மன்னிப்பை நஜிப் பெறுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பல ஆண்டுகளாக ஆட்சிப் பீடத்தில் இருந்த தேசிய முன்னணியைத் தோற்கடித்து பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தக் கூட்டணியில் டாக்டர் மகாதீரின் கட்சியும் இடம்பெற்றிருந்தது. டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியை ஏற்றதை அடுத்து, நஜிப்புக்கு எதிரான பிடி இறுகியது. 1எம்டிபி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டது.
நஜிப்பின் வழக்கு தாமதப்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழக்குகளுக்கு இடையூறு ஏற்பட்டு இருக்கக்கூடும் என்று டாக்டர் மகாதீர் குறைகூறினார்.
"எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கிற்கு தீர்ப்பு அளிக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ஊழல், பதவியைத்
தவறாகப் பயன்படுத்துதல், திருட்டு ஆகியவை தொடர்பான வழக்குகள் இன்னமும் நீதிமன்றம் முன் வரவில்லை," என்றார் டாக்டர்
மகாதீர்.
மலேசியாவில் உள்ள சில அரச குடும்பங்களுடன் நஜிப்புக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மலேசிய மாமன்னருடன் நஜிப் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் கொண்டாடியதைக் காட்டும் படங்கள் கடந்த மே மாதம் நஜிப்பின் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், 1எம்டிபி தொடர்பான வழக்கு விசாரணைக்காக நஜிப் மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.