மோனலிசா
கம்போடியா நாட்டின் சியாம் ரீப் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு நடைபெற்றது.
அங்கோர் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் கம்போடியத் தலைமைச் செயலகத்தின் கலை, பண்பாட்டுத் துறை அலுவலக வளாகத்தில் இச்சிலை நிறுவப்பட்டது.
கம்போடியப் பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
விஜிபி உலக தமிழ் சங்கத்தலைவர் வி.ஜி. சந்தோஷம் இச்சிலையை வழங்யுள்ளார். பொதுமக்கள் இதனை நேரில் சென்று இலவசமாகக் காணலாம்.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நிறைவுபெற்ற ஆறு நாள் மாநாட்டிற்கு பன்னாட்டுத் தமிழ் நடுவம், கம்போடியா-தமிழ்நாடு தொண்டு நிறுவனம், கம்போடிய கலாசார, நுண்கலை அமைச்சு உள்ளிட்டவை ஆதரவு அளித்தன.
இதில், உலகளாவிய தமிழ் அறிஞர்கள் பங்குபெற்ற ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், இசை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. இம்மாநாட்டையொட்டி கம்போடியர்களின் தாய்மொழியான கெமர் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இம் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கோர் தமிழ்ச் சங்கத் தலைவர் சீனிவாசராவ், “திருக்குறளில் நன்னெறி வாழ்விற்குத் தேவையான அனைத்து வாழ்வியல் கருத்துகளும் நெறிமுறைகளும் உள்ளன. இதனை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லவேண்டியது தமிழர்களின் கடமை என்றே கருதுகிறோம்,” எனக் கூறினார்.