புதுடெல்லி: வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தரக் கணக்கு எண்ணைக் கொண்ட ‘பான் கார்டையும்’ இனி பொது அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (01-02-2023) வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தியர்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்று ‘பான்’ அட்டையையும் இனி அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும்.
அதாவது, அரசாங்க அமைப்புகளில் அனைத்து மின்னிலக்க சேவைகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக ‘பான்’ அட்டையைப் பயன்படுத்தலாம் என்று திருவாட்டி நிர்மலா கூறியுள்ளார்.
இதனால், வாடிக்கையாளர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் ‘கேஒய்சி’ நடைமுறை எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வருமான வரித்துறையும் மற்ற அரசாங்க அமைப்புகளும் ‘பான்’ அட்டை வைத்திருப்பவர்களின் ஆவணங்களை நிர்வகிப்பதும் எளிதாகும் எனச் சொல்லப்படுகிறது.