பிள்ளைகள், வயதான பெற்றோர் எனக் குடும்பத்தினர் பலரின் ஈஸி-லிங்க் அட்டைகளுக்குப் பணம் நிரப்பும் பொறுப்பில் உள்ள பயணிகளுக்கு உதவும் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
புதிய குடும்பக் கணக்குத் திட்டம் இவ்வாறு தொகை நிரப்புவதை எளிதாக்கும்.
இதன்கீழ், ஒரு கணக்குடன் ஏழு ஈஸி-லிங்க் அட்டைகள்வரை இணைக்க முடியும்.
பின்னர் ஈஸி-லிங்க் கைப்பேசிச் செயலி மூலமாக தொலைவியக்க முறையில் எங்கிருந்தும் அந்த அட்டைகளில் பணம் நிரப்பலாம்.
இதுவரை ஒரு கணக்குடன் ஓர் அட்டையை மட்டுமே இணைக்க முடிந்தது.
குடும்பக் கணக்கைத் தொடங்குபவர் அதனை நிர்வகிக்கும் உரிமையைப் பெறுவார்.
அவர் பின்னர் ‘சிம்ப்ளிகோ ஈஸி-லிங்க்’ அல்லது ‘சிம்ப்ளிகோ’ சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் ஆறு பேரை அந்தக் கணக்கைச் சார்ந்திருப்போராக சேரும்படி அழைப்பு விடுக்கலாம்.
சார்ந்திருப்போர் பயண அட்டைகள் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டன என்ற விவரங்களை கணக்கை நிர்வகிப்பவர் அறிய இயலும்.
மறதிநோயால் பாதிக்கப்பட்டோரின் பராமரிப்பாளர்கள் போன்றோருக்கு இது மிகவும் உதவும் என்று ஈஸி-லிங்க் நிறுவனம் தெரிவித்தது.
இப்போதைக்கு, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான சலுகைக் கட்டண அட்டைகளை இத்தகைய குடும்பக் கணக்குடன் இணைக்க இயலாது.
இருப்பினும் இவ்வாண்டின் பிற்பகுதியில் அவற்றையும் இணைக்கத் திட்டமிடப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.