நொம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பெண்களுக்கான 'ஆர்ட்டிஸ்டிக் சீலாட்' என்றழைக்கப்படும் சீரான மலாய் தற்காப்புக் கலைக் குழுப் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றுள்ளது சிங்கப்பூர்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முன்னதாக அதிகபட்சம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அமிரா சாஹ்ரின், இஃபா பாட்ரிஸ்யா நோ, அஷிக்கின் ஸுல்கிஃப்லி ஆகியோர் இம்முறை தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தனர்.
சென்ற ஆண்டு வியட்னாமில் நடைபெற்ற விளையாட்டுகளில் இவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
கம்போடியாவில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் விளையாட்டுகளில் புரூணை வீராங்கனைகள் நூர் வாசிக்கா, நோர்லெயர்மா ஹாஜி ராயா, அனிசா நஜிஹா அப்துல்லா ஆகியோருக்கு எதிரான இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனைகள் 9.955 புள்ளிகள் எடுத்து வெற்றிகண்டனர்.