மெல்பர்ன்: அடுத்த காமன்வெல்த் விளையாட்டுகள் திட்டமிடப்பட்டதற்கு மாறாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலம் விளையாட்டுகளை ஏற்று நடத்துவதற்கான செலவு எதிர்பார்த்ததைவிட அதிகம் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் 2026ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை விக்டோரியா மாநிலம் ஏற்று நடத்தாது என்று தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டுகளை நடத்த ஏழு பில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் (6.3 பில்லியன் வெள்ளி) அதிகம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விக்டோரிய மாநில முதலமைச்சர் டேன் ஆண்ட்ரூஸ் கூறினார். விளையாட்டுகளுக்கென 2.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால் அடுத்த காமன்வெல்த் விளையாட்டுகளின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுகள், முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளுக்கானவை. அண்மைக் காலமாக இந்த விளையாட்டுகளை ஏற்று நடத்துவது சிக்கலாக இருந்து வந்துள்ளது.
கடந்த ஐந்து காமன்வெல்த் விளையாட்டுகளில் நான்கு ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டனிலும் நடைபெற்றன.
2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் பொறுப்பு தென்னாப்பிரிக்காவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதற்கான ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாததால் 2017ஆம் ஆண்டில் அப்பொறுப்பு அதனிடமிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது.
அதற்குப் பதிலாக 2022ஆம் ஆண்டு விளையாட்டுகள் பிரிட்டனின் பர்மிங்ஹம் நகரில் நடைபெற்றன.