கன்னியாகுமரி: தென்தமிழகத்தில் புயல் சுழற்சியின் தாக்கத்தால் கேரளத்தில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம், கொச்சி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள், சாலைகள், வீடுகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேராடு சாய்ந்துள்ளன. வீடுகளும் இடிந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் இருந்து மீட்பு படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழையில், அம்மாநிலத்தின் முதலாவதும் ஆகப் பெரியதுமான ‘டெக்னோபார்க்’ தகவல் தொழில்நுட்ப பூங்கா மழைநீரில் மிதக்கிறது.
இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது. பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து தண்ணீர் வடியாததால் ரயில் சேவையில் நேர மாற்றம், தாமதம் ஏற்பட்டது.
பல இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள், கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கடற்கரைக்கு செல்லவும் படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி, வருவாய் அமைச்சா் கே.ராஜன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
நிவாரணப் பணிகள் குறித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா்கள் சிவன்குட்டி, ராஜன் இருவரும், “திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 17 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 572 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்,” எனத் தெரிவித்தனா்.