அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு முடிந்தது. தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் வெற்றிகரமாக 100க்கும் மேற்பட்ட இளையர்கள் சிங்கப்பூரின் முதல் முறையாக 24 மணி நேர தொண்டூழிய முயற்சியில் இறங்க தோளோடு தோள் நின்றனர்.
நேரம் காலம் பார்க்காமல் தங்களின் தூக்கத்தை தியாகம் செய்து சிண்டா என்னும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் மன்றத்தைச் சேர்ந்த இளம் தொண்டர்கள் சமூகத்துக்கு உதவிக்கரம் நீட்டும் உன்னத நோக்கத்துக்காக சனிக்கிழமை (நவம்பர் 18) ஒன்று கூடினர்.
‘யூத்கிவிங்24’ எனப்படும் அந்தத் திட்டம் கடந்த ஓராண்டுக்கு மேலாக திட்டமிட்ட பின்னர் சனிக்கிழமை காலை நிறைவுபெற்றது.
முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தின் கூறுகளில் ஒன்றான சமூகத்தில் தேவைப்படுவோருக்கு உதவி செய்ய முனைய வேண்டும் என்பதை பறைசாற்றும் வண்ணம் நடைபெற்ற அந்தத் திட்டத்தில், இளம் தொண்டூழியர்கள் பற்பல வழிகளில் தங்களின் பண்புகளை வெளிப்படுத்தினர்.
சமூக அமைப்புகள் சிலவற்றுடன் ஒன்றிணைந்து வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு தயார் செய்வது, மரம் நடுவது, வீடற்றவர்களுடன் பழகுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளிப்பது, வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவது, சிறப்புத் தேவையுடைய செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) காலை திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது. அதில் தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தார்.
தமது சிறப்புரையில் இளையர்களைப் பாராட்டிய அமைச்சர், “24 மணி நேரம் இளையர்கள் சளைக்காமல் சகிப்புத்தன்மையுடன் தொண்டூழியத்தில் இறங்கியது எளிதானதல்ல.
“சிங்கப்பூரர்கள் பொதுவாக பண்புடையவர்கள். உள்ளூர் மற்றும் அனைத்துலக அளவில் நடக்கும் நெருக்கடிகளுக்கு நாம் தயங்காமல் உதவி செய்வோம். சிண்டா இளையர் மன்றம் இந்த முயற்சியை அடுத்த ஆண்டும் எடுக்க வேண்டும். நானும் உதவி செய்ய முன் வருவேன்,” என்று தெரிவித்தார்.
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான அன்பரசு ராஜேந்திரன், “இம்முயற்சி மிகவும் புதிதானது. இளையர்கள் ஒன்று சேர்ந்து அதில் இறங்கியது அவர்களின் கடமை உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. எதிர்காலத்தில் அவர்கள் சமூகத் தலைவர்கள் ஆகும்போது தொண்டூழிய அனுபவங்கள் அவர்களுக்குச் சிறந்த அனுபவப் பாடங்களாக அமையும்,” என்று கூறினார்.
இளையர்களில் ஒருவரான நந்தினி சந்திரன், 23, கடந்த நான்காண்டுகளாக சிண்டா இளையர் மன்றத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். வீடற்றவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுடன் இருந்த அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “முதன்முறையாக நான் வீடற்றவர்களுடன் நேரம் செலவிட்டேன். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.
“வருங்காலத்தில் இதுபோன்ற மேலும் பல முயற்சிகளை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். மேலும், என்னைப் போன்ற இளையர்கள் தொண்டு செய்ய அவர்கள் தங்களுக்குப் பிடித்த பிரிவைத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்து பார்க்கலாம்,” என்றார்.
மற்றோர் இளையரான தீபன் நாயர், 26, “நான் இந்தத் திட்டத்தில் பல்வேறு வகைகளில் எனது உதவிக் கரத்தை நீட்டினேன். எனக்கு அது மனநிறைவை அளித்தது. ஓய்வு எடுக்காமல் தொண்டில் இறங்கியது சோர்வாக இருந்தாலும், பிறருக்கு உதவுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்களும் என்னைப்போல தொண்டுழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்,” என்று சொன்னார்.