சிங்கப்பூரின் ஆகப் புதிய, ஒருங்கிணைந்த தீவிர கவனிப்பு, சமூக மருத்துவமனையான உட்லண்ட்ஸ் ஹெல்த், டிசம்பர் 22ஆம் தேதி முதன் முதலில் அதன் நோயாளிகளை வரவேற்றது.
அதன் நிபுணத்துவ மருந்தகங்கள் திறக்கப்பட்டு, 40 சமூக மருத்துவமனை படுக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மருத்துவமனையின் திறப்பு, இரண்டு முக்கிய அம்சங்களை வலியுறுத்தியது.
முதலில், ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரியைக் கடைப்பிடிப்பதற்கான முக்கியத்துவம். இரண்டாவது சிங்கப்பூர் முழுதும் முன்னணி நிலையில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைக் கொண்டுவருவதற்கான தொடர் தேவை.
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை சவால்மிகுந்த ஒரு திட்டம். அதில் தீவிர கவனிப்பு, சமூக மருத்துவமனைகள் ஒரே கட்டடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. நோயாளிகள் தங்களின் மருத்துவரிடமே தொடர்ந்து செல்வதற்கும், வெவ்வேறு பராமரிப்புக்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதில் மாறுவதற்கும் அது வகைசெய்கிறது.
7.7 ஹெக்டர் அளவிலான அந்த மருத்துவமனை எஞ்சியுள்ள அதன் மற்ற சேவைகளை அடுத்த ஆண்டு மே மாதம் முழுமையாகச் செயல்படுத்தும். அவசரப் பிரிவு, தீவிர கவனிப்பு வார்டுகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இறுதியில் அதில் 1,000 தீவிர கவனிப்பு, சமூகப் படுக்கைகள் இருக்கும். அதோடு அதன் நீண்டகால பராமரிப்பு வசதியில் கிட்டத்தட்ட 400 படுக்கைகள் இருக்கும். எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்ய 1,800 படுக்கைகள் அங்கு வைக்கப்படலாம்.
நோயாளிகளுக்குச் சுமுகமான ஒருங்கிணைப்பு வசதிகள் தேவை என்பது மறுக்கமுடியாதது. நோயாளிகள் இடம் மாற்றுவதற்கு ஏற்ற நிலைக்கு முன்னேறும்போது, அவர்கள் அருகிலேயே இருக்கும் சமூக மருத்துவமனையில் தொடர்ந்து பராமரிப்பைப் பெறலாம்.
முற்றிலும் வேறோர் இடத்துக்கு மாறிச் செல்லவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்காது.
சமூக மருத்துவமனைகள் குறுகியகால தொடர் பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதாக சுகாதார அமைச்சு கூறியது.
மருத்துவ வசதி, தாதிமைச் சேவை, மறுவாழ்வுப் பராமரிப்பு ஆகியவை சமூக மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய பராமரிப்புச் சேவைகளில் அடங்கும்.
நோயாளிகள், முன்கூட்டியே தங்களின் மறுவாழ்வுப் பயணத்தைத் தொடங்க, தீவிர கவனிப்புப் பராமரிப்பிலிருந்து மறுவாழ்வுப் பராமரிப்புக்குச் சுமூகமாக மாறலாம்.
அதே நேரத்தில், தீவிரக் கவனிப்பு மருத்துவமனைகளில் அவசரத் தேவைகள் உள்ள நோயாளிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது.
முக்கியமாக, ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று தேசிய சுகாதாரப் பராமரிப்புத் தகவல் தொழில்நுட்ப முறைகளுடன் திறக்கப்பட்ட முதல் பொது மருத்துவமனையாக, உட்லண்ட்ஸ் ஹெல்த் அமைந்துள்ளது.
மின்னியல் மருத்துவப் பதிவுகள், கட்டணமுறை, மருந்தகச் செயல்முறைகள் ஆகியவையே அவை. இதன் மூலம், செயல்திறன் மேம்படும். மருந்தகப் பராமரிப்பு சுமுகமாக அமையும்.
இடமும் ஒரு முக்கிய அம்சம். சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதியில் உள்ளவர்களுக்குப் பராமரிப்பு வழங்கும் உட்லண்டஸ் ஹெல்த், பல்வேறு திட்டங்கள் மூலம் குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த ஊக்கமளிக்கிறது.
கம்போங் அட்மிரல்டியில் இருக்கும் முதல் சமூக அடிப்படையிலான அவசரப் பராமரிப்பு நிலையமும் மற்றவர்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளும் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், சுகாதாரப் பராமரிப்பு தொடர்ந்து எளிதில் அணுகக்கூடியதாகவும், கட்டுப்படியானதாகவும் வைத்திருக்க அதிகாரிகள் தொடர்ந்து வழிகளை மேம்படுத்தவேண்டியது மிக முக்கியம்.
நோயாளிகளுக்குப் பராமரிப்பை எந்தெந்த வழிகளில் கொண்டுசேர்க்கலாம் என்பதற்கான புத்தாக்கமிக்க திட்டங்கள், சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு முறை, செயல்திறனிலும் நம்பகத்தன்மையிலும் ஈடு இணையற்று திகழ வேண்டும் என்ற அதன் விருப்பத்திற்குத் துணை இருக்கும்.