புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் துபாயில் சந்தித்துப் பேசியதாக மலேசிய அரசு அண்மையில் கூறியது.
இதுதொடர்பாக தலைநகர் கோலாலம்பூரிலும் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா, பாகாங், சாபா, பெர்லிஸ், சரவாக் ஆகிய மாநிலங்களிலும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் அன்வாரின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகம்மது அகின் தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்க வேண்டும் என்பதற்காக மேலும் பல புகார்கள் அளிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
“பிரதமரை மாற்றுவது, அரசாங்கத்தைக் கவிழ்ப்பது ஆகியவை தொடர்பான பேச்சுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்று திரு ஷம்சுல் கூறினார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்க தீட்டப்படும் சதிக்குப் பின்னால் யார் யார் உள்ளனர் என்பது குறித்து திரு ஷம்சுல் தமது புகாரில் குறிப்பிடவில்லை.
அதைக் காவல்துறை விசாரிக்கட்டும் என்றார் அவர்.