தாமான் ஜூரோங்கில் ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இருப்பினும், விபத்து நடந்த சாலைப் பகுதிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு யுவான் சிங் சாலையின் குறுக்கே வேகமாகக் கடந்துதான் ஆகவேண்டும் என்று லேக் விஸ்தா குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
தாமான் ஜூரோங்கிலுள்ள லேக் விஸ்தா குடியிருப்பு, ஹு சிங் ரோட்டுக்குக் குறுக்கே அமைந்துள்ளது.
இந்த ஹு சிங் ரோட்டில் அமைந்துள்ள யுவபாரதி அனைத்துலகப் பள்ளியின் மாணவிதான் உயிரிழந்த சிறுமி என்று அறியப்படுகிறது.
பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு இரு வழிகளிலும் செல்லும் தடங்களுடைய சாலை குறுக்கே கடப்பார்கள் என்று அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
“இந்தச் சாலைப் பகுதியில் போக்குவரத்து விளக்குகள் ஏதும் இல்லை. சாலையைக் கடப்பதற்கான இடமும் வெகுதூரம் உள்ளது,” என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
இதற்கிடையே, பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் வேளையில் பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என சுமார் எண்மர், பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றவாறு சாலை விதிகளை மாணவர்கள் மீறாது இருப்பதை உறுதிசெய்து வருவதாக பள்ளிப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
விபத்து நடந்த உடனே பள்ளி ஆசிரியர்கள் அங்கு விரைந்தபோதும் எதுவும் செய்ய முடியவில்லை என்றார் பேச்சாளர்.
பள்ளியைச் சுற்றி மேலும் பாதுகாப்புமிக்க போக்குவரத்துச் சூழலை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பள்ளி ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
விபத்து நடந்து மறுநாளான ஜனவரி 31ஆம் தேதியன்று பள்ளி மூடப்பட்டதாகவும் பிப்ரவரி 1ஆம் தேதியன்று மீண்டும் திறந்தபோது உயிரிழந்த மாணவிக்காக அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதாகவும் பள்ளி முதல்வர்கள் டாக்டர் ஜகதீசன் ஜெயஸ்ரீ, திருவாட்டி மகாலட்சுமி வெங்கடராமன் இருவரும் கூறினர்.