முந்தைய தலைமுறைகள் செய்த தியாகத்தாலும் கடைப்பிடித்த சிக்கனத்தாலும் சிங்கப்பூர் அதன் இருப்பு நிதியைச் சிறுகச் சிறுக சேர்த்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய தலைமுறை தங்களைப் பயனாளிகளாக மட்டும் பாராமல் எதிர்காலச் சமுதாயத்துக்காக இந்த இருப்பு நிதியைக் கட்டிக்காக்கும் பொறுப்பாளராகவும் கருத வேண்டும் என்றார் அவர்.
இருப்பு நிதி தொடர்பில் ‘சரியான உள்ளுணர்வு’ இருத்தல் முக்கியம் என்ற திரு லீ, முடிந்தவரை சேமிக்கவும் இருப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொள்ளவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இருப்பு நிதியைப் பயன்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.
மேலும் அதிக இருப்பு நிதியை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி 7ஆம் தேதியன்று கோரியதை அடுத்து பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
“நமது மூதாதையரிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்தக் குடும்பப் புதையல் சிதைவுறாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேவேளை, இனிவரும் தலைமுறைகள் மீது கடன் சுமையை ஏற்றிவிடவோ அவர்களின் எதிர்காலத்தை அடகு வைத்துவிடவோ கூடாது,” என்றார் பிரதமர் லீ.
2008ஆம் ஆண்டில் அனைத்துலக நிதி நெருக்கடி ஏற்பட்டபோது சிங்கப்பூர் அதன் இருப்பு நிதியிலிருந்து $4 பில்லியனை எடுத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தில் $40 பில்லியன் இருப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்டது.
எனவேதான், இருப்பு நிதி என வரும்போது ஒரு குறிப்பிட்ட தொகை போதுமானது என நாம் நினைப்பது தவறு என்று சுட்டினார் திரு லீ.
இனிவரும் காலத்தில் நெருக்கடி ஏதும் நேராது என்ற உத்தரவாதம் இல்லை என்பதால் இருப்பு நிதியில் இருக்கும் தொகை போதுமானது என்று நினைத்துவிட முடியாது என்றார் அவர்.