மும்பை: இந்தியர்கள் அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவுப் பொருள்களில் குறைவாகவும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற விருப்புரிமை பொருள்களில் கூடுதலாகவும் செலவிடுவதாகவும் அரசாங்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி போன்றவற்றிலும் இந்தியர்கள் கூடுதலாக செலவு செய்கின்றனர்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட குடும்பப் பயனீட்டு செலவின ஆய்வில், கடந்த ஜூலை வரையிலான 12 மாத காலத்தில் தனிநபருக்கான சராசரி கிராமப்புற பயனீட்டாளர் செலவினம் மாதத்திற்கு ரூ.3,773ஆக (S$61) உயர்ந்ததாகக் கணிக்கப்படுகிறது.
ஒப்புநோக்க, 2011-2012 வரை நடத்தப்பட்ட இதற்கு முந்தைய ஆய்வில் செலவினம் ரூ.1,430ஆக இருந்தது.
அதேவேளையில், நகர்ப்புற செலவினம் ரூ.2,630லிருந்து ரூ.6,459ஆக உயர்ந்தது.
இப்புதிய ஆய்வு, இந்தியாவின் பயனீட்டாளர் விலை பணவீக்கக் குறியீட்டுக்கான மறுஆய்வின் அடிப்படையாக அமையும்.
கிராமப்புறப் பயனீட்டாளர்களுக்கு உணவு மீதான செலவினம், மாதாந்திரப் பயனீட்டில் 46 விழுக்காடாகச் சரிந்தது. 2011-12 வரையிலான காலகட்டத்தில் இந்த விகிதம் 53 விழுக்காடாக இருந்தது.
நகர்ப்புறப் பகுதிகளில் இந்த விகிதம் 43 விழுக்காட்டில் இருந்து 39 விழுக்காடாகச் சரிந்தது.
இந்தியர்கள் கோதுமை, அரிசி உள்ளிட்ட தானிய வகைகளில் குறைவாகவும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் கூடுதலாகவும் செலவிடுகின்றனர்.