வீட்டிலேயே மருத்துவமனைப் பராமரிப்பைப் பெற விரும்பும் நோயாளிகள் கட்டணங்களைச் சலுகை விலையில் செலுத்தலாம்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், அவர்கள் தங்களின் மெடிசேவ் சுகாதாரப் பராமரிப்புச் சேமிப்புகளையும், மெடிஷீல்டு லைஃப், ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் காப்பீட்டு வழங்குதொகைகளையும் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தலாம்.
இதன் மூலம் எம்ஐசி@ஹோம் எனப்படும் நடமாடும் உள்நோயாளிப் பராமரிப்புச் சேவை, சிங்கப்பூரின் பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படும் பராமரிப்பு மாதிரி ஆகும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதோடு, நாட்டில் அதிகரித்துவரும் மக்கள்தொகையின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள தெங்கா நகரில் புதிய ஒருங்கிணைந்த பொது, சமூக மருத்துவமனையைக் கட்டுவதற்கு சுகாதார அமைச்சு திட்டம் கொண்டுள்ளது.
அது 2030களின் தொடக்கத்தில் தயாராகும்.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்புக் கொள்ளளவை விரிவுபடுத்துவதற்கான சில உத்திகள் இவை என்று தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான உரையில் திரு ஓங் கூறினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப்பரவலைத் தொடர்ந்து, சிக்கலான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே, மருத்துவமனையில் படுக்கைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதற்குக் காரணமாக உள்ளது என்றார் அவர்.
கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்னரும் பின்னரும் மருத்துவமனையில் சராசரியாக தங்கும் காலம் ஆறு முதல் ஏழு நாள்கள் வரை அதிகரித்ததாக திரு ஓங் கூறினார். அது நோயாளிகளின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டு அதிகரிப்பைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள்தொகை மிக விரைவாக மூப்படையும் நிலையில் இந்தச் சூழல் நிலவுவதாகக் கூறிய திரு ஓங், இது பிரச்சினையை மேலும் மோசமாக்குவதாகவும், இது நீண்டகால சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவமனைகளில் காத்திருக்கும் நேரம் குறித்தும் கொள்ளளவு தொடர்பான விவகாரம் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அவசரப் பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளை அவசர மருத்துவ வாகனங்கள் மிக அருகில் உள்ள தகுந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கான நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளதாகத் திரு ஓங் கூறினார்.
இருப்பினும், அவசரப் பிரிவுகளில் உள்ள 40 விழுக்காட்டுச் சம்பவங்கள் உயிருக்கு ஆபத்தானவையோ உடனடிக் கவனிப்பு தேவைப்படுபவையோ அல்ல என்றார் அவர்.
படுக்கை பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு உதவியாக, சுகாதார அமைச்சு அதன் ‘எம்ஐசி@ஹோம்’ முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்துகிறது. அந்தத் திட்டத்தின்கீழ் நோயாளிகளின் வீடுகளில் மருத்துவமனை படுக்கைகள் அமைக்கப்படும்.
நோயாளிகள் குணமடையும்வரை, சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் தொலைத்தொடர்பு ஆலோசனைகள், வீட்டுச் சந்திப்புகள் ஆகியவற்றின் மூலம் நோயாளிகளுக்குப் பராமரிப்பை வழங்கலாம்.