சுபாங் ஜெயா: 500,000 ரிங்கிட் (S$142,000) பணத்துடைய கைப்பெட்டியை டாமான்சாராவில் யாரேனும் தவறவிட்டிருந்தால் உடனே முன்வருமாறு மலேசியக் காவல்துறையினர் மார்ச் 21ஆம் தேதியன்று அறிவுறுத்தல் விடுத்தனர்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டாமான்சாரா பகுதியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் பாதுகாவல் அதிகாரி அந்தக் கைப்பெட்டியை மார்ச் 20ஆம் தேதியன்று கண்டுபிடித்தார்.
வாகனம் நிறுத்தும் இடத்தில் பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக சுபாங் ஜெயா காவல்துறை மாவட்டத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெட்டி இருந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. ஆனால், வாகனம் நிறுத்துமிடத்தின் நுழைவாயில், வெளியேறும் வழி இரண்டிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பெரும் தொகைக்குச் சொந்தக்காரர், பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அல்லது 03-7966-2222 என்ற எண்ணில் காவல்துறையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பணம் தன்னுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரமும் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.