ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி, நிலக்கரி சுரங்க முறைகேடு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை மார்ச் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அந்த நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 5வது முதலமைச்சராக இருந்தவர் ஹேமந்த் சோரன். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும், மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிபு சோரன் மகனும் ஆவார்.
ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஹேமந்த் சோரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.