கியூஆர் குறியீடு மூலம் எல்லை கடந்து பணம் அனுப்புவதை அதிகரிக்க ஓசிபிசி வங்கி திட்டமிடுகிறது. கடன் அட்டை, கடன் பற்று அட்டை ஆகியவற்றின் வரிசையில் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்துவதையும் சிங்கப்பூர் சுற்றுப் பயணிகளிடையே பிரபலமாக்க அது எண்ணியுள்ளது.
சொத்து அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான ஓசிபிசி, இந்த ஆண்டு எல்லை கடந்த கியூஆர் குறியீட்டுப் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை 250,000 ஆக உயர்த்த இலக்கு கொண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்.
ஓசிபிசி வங்கி அதன் மின்னிலக்கச் செயலி வாயிலாக ஐந்து விதமான கியூஆர் குறியீட்டு அமைப்புகளுடன் கைகோத்துள்ளது.
அலிபே+, யூனியன்பே இண்டர்நேஷனல், தாய்லாந்தின் பிராம்ப்ட்பே, மலேசியாவின் டுயிட்நவ், இந்தோனீசியாவின் குவிக் ரெஸ்பான்ஸ் கோட் இந்தோனீசியா ஸ்டாண்டர்ட் ஆகியன அவை.
சிங்கப்பூரில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் தனது வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தக் கட்டமைப்புகள் மூலம் பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தக் கட்டமைப்பு சேவையாற்றுவதாக ஓசிபிசி வங்கி செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) கூறியது.
பணம் அனுப்புமுன், வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை ஓசிபிசி வங்கியின் கைப்பேசிச் செயலி வாயிலாக உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். அனுப்பிய பிறகு வங்கிக் கணக்கில் இருந்து சிங்கப்பூர் வெள்ளி கழிக்கப்பட்ட விவரத்தையும் அதில் அறியலாம்.
கடந்த ஆண்டு, ஓசிபிசி மின்னிலக்கச் செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட எல்லை கடந்த கியூஆர் குறியீட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாதாமாதம் சராசரியாக 65 விழுக்காடு என்னும் அளவில் அதிகரித்தது.
அனுப்பப்படும் தொகைகளின் மதிப்பும் சராசரியாக 80 விழுக்காடு ஏறியது. அந்தப் பரிவர்த்தனைகளில் சீனாவே பெரும்பங்கு வகித்தது.
இந்த விகிதம் மேலும் வளரும் என்று ஓசிபிசி வங்கி நம்பிக்கை தெரிவித்து உள்ளது.