சென்னை: தன்மீதான பயத்தினாலேயே கரும்பு விவசாயி சின்னத்தை முடக்கிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் வியாழக்கிழமையன்று சீமான் வாக்கு சேகரித்தார்.
“தேர்தல் ஆணையம் நாடக கம்பெனிபோல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ள பாமக, தமாகாவுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எளிதாகச் சின்னம் கிடைத்துவிட்டது.
“நாங்கள் பாஜகவை எதிர்ப்பதாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு தராமல் முடக்கி வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். என் மீதான பயத்திலேயே இப்படிச் செய்துள்ளனர்.
“ஓட்டுப்பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜப்பான் அதனை பயன்படுத்துவது இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தூக்கி எறிந்துவிட்டன.
“இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த இயந்திரத்தை பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று ஜப்பான் கூறி இருக்கிறது.
“வாக்குப்பதிவு முடிந்து 41 நாள் கழித்துதான் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுகிறார்கள். இத்தனை நாள்களில் அதில் தில்லுமுல்லு செய்ய முடியாதா?
“திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து நின்று தேர்தலைச் சந்திக்கிறது. லஞ்ச ஊழல் அழுக்கு எங்கள்மீது படிந்துவிடக்கூடாது என்பதால் தனித்தே களம் இறங்கி இருக்கிறோம்.
“இன்று நாட்டில் ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டது. லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
“டிஜிட்டல் இந்தியா என்று மத்தியில் ஆளும் பாஜகவினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆழ்துளைக் கிணறுகளை மூடி வைக்காமல் அலட்சியமாக செயல்படுபவர்களைக் கைது செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்க வேண்டும்.
“திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக எளிய பிள்ளைகளாகிய நாங்கள் உங்களை நாடி வந்துள்ளோம். எனவே இந்தமுறை மைக் (ஒலிவாங்கி) சின்னத்துக்கு வாக்களியுங்கள்,” என்று சீமான் பேசினார்.