குளிர்சாதனம் தொடர்பான செலவையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்கும் நோக்குடன் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்புக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுகுறித்த சாத்தியக்கூறுகளை ஆராய பயனீட்டு நிறுவனம் ஒன்றுடன் கலந்துரையாடி வருவதாக இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை ஆகியவற்றை உள்ளடக்கிய ஜூரோங்ஹெல்த் வளாகம் கூறியது.
அந்தப் பயனீட்டு நிறுவனத்தின் பெயரை அது வெளியிடவில்லை.
சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு அதிக எரிசக்தி தேவைப்படுகிறது.
அதிக எரிசக்தியைப் பயன்படுத்தும் கருவிகளை அது 24 மணி நேரமும் பயன்படுத்துகிறது.
இந்நிலையில், பசுமைத் திட்டத்துக்கு உட்படும் சில செயல்முறைகளை நடைமுறைப்படுத்த ஜூரோங்ஹெல்த் வளாகம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
மையப்படுத்தப்பட்ட இடத்தில் குளிர்நீரை உற்பத்தி செய்து, பிறகு அதை அந்த வட்டாரத்தில் உள்ள பல கட்டடங்களுக்கு அனுப்பிவைத்து அவற்றின் குளிர்சாதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே வட்டாரக் குளிரூட்டி தொழில்முட்பமாகும்.
தெம்பனிஸ் நகர மையத்தில் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள சென்சுரி ஸ்குவேர், மத்திய சேமநிதி தெம்பனிஸ் கட்டடம், இன்கம் அட் தெம்பனிஸ் ஜங்ஷன், ஓசிபிசி தெம்பனிஸ் சென்டர் 2, அவர் தெம்பனிஸ் ஹப், தெம்பனிஸ் மால், தெம்பனிஸ் 1 ஆகியவை வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்பில் இணைக்கப்படும்.
மரினா பே, தெங்கா போன்ற இடங்களில் வட்டாரக் குளிரூட்டிக் கட்டமைப்பு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.