மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 9வது ஐ.பி.எல். போட்டி நாளை 9ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் இன்று வெள்ளிக் கிழமை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. தொடக்க விழா மிகவும் பிரம்மாண்டமான முறை யில் நடைபெற அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க பாப் பாடகர் கிறிஸ் பிரவுன் தொடக்க விழாவில் பாடுகிறார். புகழ்பெற்ற 'லாயல்', 'வித்யூ' போன்ற பாடல்களை அவர் தனது குழுவுடன் இணைந்து பாடி மேடையில் அசத்துகிறார். கிறிஸ் பிரவுன் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். மேஜர் லேசரின் நடனக் குழுவும் தொடக்க விழாவில் அசத்த இருக்கிறது. பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரினா கைஃப், யோயோ ஹனிசிங் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடக்க விழா இறுதியில் 8 அணிகளின் கேப்டன்கள் உறுதி மொழி எடுப்பார்கள். சோனி மேக்ஸ், சோனி செட் மேக்ஸ் தொலைக்காட்சியில் ஐ.பி.எல். தொடக்க விழா நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 32 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு இருக்கும். 9ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ரைசிங் புனே அணிகள் மோதுகின்றன.