டாக்சி ஓட்டுநரை உதைத்து அவருக்குக் காயம் விளைவித்த குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று சுவா சூ காங் செண்ட்ரலில் உள்ள புளோக் 210க்குப் பக்கத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் 26 வயது கேரி கோ கூன் வெய் அந்த டாக்சி ஓட்டுநரைத் தாக்கினார்.
அன்றிரவு மதுபானம் அருந்தியிருந்த கோ, தமது காதலியுடன் டாக்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் டாக்சியில் வாந்தி எடுத்தார். இதைப் பார்த்த டாக்சி ஓட்டுநரான 41 வயது திரு அலெக்ஸ் இங் கெங் தியோங் அவரிடம் ஒரு பிளாஸ்டிக் பையைக் கொடுத்தார்.
டாக்சியை சுத்தம் செய்வதற்கான செலவை ஏற்பீர்களா என்று திரு தியோங் அவர்களிடம் கேட்டார். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதிகாலை 1.27 மணிக்கு டாக்சி அதன் சேரும் இடத்தை அடைந்தது. டாக்சியை சுத்தம் செய்வதற்கான செலவினம் குறித்து திரு இங் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதனை அடுத்து, கோ அவரைக் குத்த முயன்றார். திரு இங்கின் முகத்தில் கோ உதைத்தார். டாக்சியில் பொருத்தப்பட்டிருக்கும் அவசரகால பொத்தானை அழுத்தி போலிசாரை அழைத்தார் திரு இங்.
வலது தாடையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக திரு இங்குக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்துக்காக கோவுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.