முழுமூச்சாக வேலை தேடுபவர்கள், சில காலம் ஆன பிறகும் வேலை கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஒருவித விரக்தியும் கவலையும் எழத் தொடங்கலாம். ஒரு வேலையைவிட்டு வெளியேறுபவர்கள் கிட்டத்தட்ட 10 வாரங்களுக்குள் மற்றொரு வேலையில் சேர இயலாதபோது அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவின் கேலப் சுகாதாரக் குறியீடு நிறுவனம் கூறுவதாக ‘த நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது. மேலும், வேலையில் இல்லாமல் வேலை தேடுபவர்களுக்கு நிதி தொடர்பான மனவுளைச்சலும் உடல் நலிவும் அதிகமாவதாகக் தகவல்கள் கூறுகின்றன.
வேலைக்கான தேடலுக்கு ஒரு முடிவு கிடையாதா என்ற ஏக்கம் நல்ல வேலை விண்ணப்பதாரர்களையும் பாதிக்கலாம் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிஷெல் மைடன்பர்க் தெரிவித்துள்ளார். இத்தகைய இடர்ப்பாட்டை எதிர்கொள்வதற்கு திறன் நம்மிடையே பொரும்பாலானோருக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை.
மனம் மேலும் தளர்ச்சி அடைய, வேலை கிடைப்பது இன்னும் சிரமமாகலாம். சிலர் குடும்ப நெருக்குதல்களுக்கு ஆளாகலாம். இதனைச் சமாளிப்பதற்கான வழிதான் என்ன?
ஒருவரின் வேலை அவரது முழு அடையாளமாக இருக்கக்கூடாது. “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற நற்பண்பு உள்ளவர்கள் பலர் நேரங்களில் தங்கள் வேலையுடன் ஐக்கியமாகிவிடுகின்றனர். எனினும் வேலையில் இருக்கிறோமா இல்லையா என்பதைக் காட்டிலும் நாம் வளர்த்துள்ள திறமைகளையும் பண்புகளையும் பற்றி நினைத்து அதன் மீது பெருமைப்படவேண்டும். அதனால் நமக்கு அழுத்தம் குறைந்து உற்சாகம் மேலோங்கும்.
அத்துடன் வேலை தேடும்போது அதனை நாம் வேலையாக நினைத்துக்கொண்டே செய்தால் தொடர்ந்து உற்சாகத்துடன் இருக்க முடியும். வேலை தேடுவதற்கான நேரத்தை ஒதுக்கி, அலுவலக வேலையைப் போல் வேலை விண்ணப்பங்களை நீங்களே கால வரையறைகளை ஏற்படுத்தி அதனைச் செய்து முடிக்கவேண்டும். இதை நாம் கடைப்பிடித்தோமானால் ஆக்கபூர்வமான முறையில் நேரத்தைக் கழிக்கலாம். மனச்சோர்வு சுகமில்லாத சோம்பலாக உருமாறும் அபாயம் உள்ளது. எனவே, கவனம் தேவை. அத்தகைய சோர்வுக்கு இடமளிக்காமல் நாம் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள தீர்மானம் செய்யவேண்டும்.
மேலும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையத்தில் இப்போது பலர் இலவசமாகவே பல்வேறு திறன்களைக் கற்றுக்கொண்டு தங்கள் புத்தியை மேலும் தீட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கற்கும் புதிய திறன்களைத் தங்கள் வேலை விண்ணப்பத்தில் சேர்க்கும்போது அந்த விண்ணப்பம் மேலும் வலுவடையலாம். மன அழுத்த உணர்வுக்கு எதிர்மறையான உற்சாக உணர்வை ஒருவர் திறன் மேம்பாட்டின்மூலம் பெற முடியும்.