இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவை உணவில் 'கொஞ்சம் தூக்கலாக' இருந்தால் உடல் நலத்துக்குக் கேடு என்பதைப் பலர் தற்போது உணர்ந்திருப்பதைப்போல, அந்த விதி எண்ணெய்க்கும் பொருந்தும் என்பதை உணர வேண்டும். அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் கொழுப்பின் அளவு கூடுதல், ரத்தக்
குழாய் அடைப்பு, இதய நோய், உடல் பருமன் அதிகரிப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண் ணெய், ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றுடன் தற்போது காய்கறிகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்யும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
எந்த எண்ணெய்யாக இருந்தாலும் 'தாராள' மனப்பான்மையைக் கைவிட்டு, சமையலுக்கு இரண்டு முதல் 3 தேக்கரண்டிக்கு மிகாமல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
எண்ணெய்களில் பெரும்பாலும் 'வைட்டமின் ஈ', கொழுப்புச் சத்துகள் மிகுந்திருக்கும். ஆனால் ஒவ்வோர் எண்ணெய்க்கும் தனித்தன்மை உண்டு. அதனைக் கருத்தில்கொண்டு எண்ணெய் களைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சூடுபடுத்தினால் ஆலிவ் எண்ணெய்யின் தன்மை மாறிவிடுவதாகக் கூறப்படுகிறது. எனவே, சாலட் போன்ற சூடேற்றாத பயன்
பாடுகளுக்கு ஆலிவ் எண்ணெய் உகந்தது.
சூரியகாந்தி எண்ணெய்யில் ‘வைட்டமின் ஈ‘ நிறைந்துள்ளது. அதிக வெப்பத்திலும் சூரிய காந்தி எண்ணெய்யின் சத்துகள் பெரும் மாற்றம் அடைவதில்லை. அதனால், பொரிப்பதற்கு பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணெய் பயன் படுத்தப்படுகிறது. இருப்பினும் பொரித்த உணவுகளை அளவுடன் சாப்பிடுவது நலம்.
கடலை எண்ணெய்யிலும் குறைவான அளவே கெட்ட கொழுப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனை பெரும் பாலும் பொரிப்பதற்குப் பய ன்படுத்துகிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் 90% கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
எண்ணெய்யில் உடலுக்குத் தேவையான சத்துகள் இருந்தாலும் குறைந்த அளவில் அதனைப் பயன்படுத்துவதற்குப் பழகிக்கொள்வது அவசியம். தற்போது கடைகளில் பரவலாகக் கிடைக்கும் செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்தினால் அவற்றின் சத்துகளை முழுமையாகப் பெற வாய்ப்புள்ளது.