உள்ளூர் “யூடியூபர்” ப்ரீத்தி நாயர் (Preetipls), அவரது சகோதரர் சுபாஸ் நாயர் இருவரும் இணையத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய “ரெப்” காணொளியின் தொடர்பில் போலிசார் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி புதன்கிழமை அறிக்கை வெளியிட்ட போலிசார், காணொளி தொடர்பான விசாரணையை முடித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தின் சூழ்நிலைகளைப் பரிசீலித்து, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, உடன்பிறப்புகளுக்கு 24 மாதகால நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய காணொளி ஜூலை 29ஆம் தேதி ஃபேஸ்புக்கிலும் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டது. அதே நாளன்று, காணொளி பற்றி போலிசாரிடம் புகார் செய்யப்பட்டது.
பிற்பாடு, அந்தக் காணொளியைத் தயாரித்து வெளியிட்டதாக ப்ரீத்தியும் அவரது சகோதரரும் போலிசாரிடம் ஒப்புக்கொண்டனர்.
“இந்தக் காணொளி குற்றவியல் தண்டனை சட்டத்தைத் தெளிவாக மீறியிருந்தது,” என போலிசாரின் அறிக்கை குறிப்பிட்டது.
“இந்தக் காணொளி அனுமதிக்கப்பட்டால், எல்லா சமூகங்களையும் குறிவைக்கும் இதுபோன்ற மற்ற அவதூறான காணொளிகளையும் அனுமதிக்க வேண்டியிருக்கும்,” என அறிக்கை கூறியது.
இதுபோன்ற செயல்களால் இனவாதமும், இனப்பூசலும் மோசமடைந்து, முடிவில் வன்செயலும் வெடிக்கக்கூடும் என கடந்த வாரம் உட்பட அண்மைக் காலமாக உலகெங்கிலும் நடந்துவரும் நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுவதாகவும் போலிசார் கூறினர்.
“இத்தகைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக மலாய் மற்றும் இந்திய சமூகங்கள், அதிகமாகப் பாதிக்கப்படக்கூடும்.
“இனத்தையும் சமயத்தையும் குறிவைக்கும் எந்தவித அவதூறான பேச்சையும் அனுமதிக்காத தெளிவான அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிக்கிறது,” என போலிசார் குறிப்பிட்டனர்.