சுகாதாரத் துறையிலும் ஊடகத் துறையிலும் பணியாற்றி வந்த ஷீலா என அழைக்கப்படும் திருமதி பழனியம்மாள் பெரியசாமி, தமது 36வது வயதில் ஆரம்பக்கல்வித் துறையில் கால்பதித்தார். தற்போது 48 வயதாகும் திருமதி ஷீலா மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவன அமைப்பான பிசிஎஃப் பாலர் பள்ளி ஒன்றில் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.
சென்ற ஆண்டு கல்வி அமைச்சு வழங்கிய தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழிப் பாட ஆசிரியருக்கான விருதை இவர் பெற்றார்.
பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஆற்றிய தமது தேசிய தின பேரணி உரையில் இவரை குறிப்பிட்டு, இவரைப் போன்ற ஆசிரியர்களால் நமது நாட்டின் குழந்தைகள் நல்ல கைகளில் இருக்கிறார்கள் என்று பாராட்டினார்.
“கற்பித்தல் துறையில் எனக்குச் சிறு வயதிலிருந்தே ஆசை உண்டு, ஆனால் தேசிய கல்விக் கழகத்தில் சேர போதுமான அளவிற்கு கல்வி நிலை அப்போது இல்லாததால் நான் கற்பித்தலை தொடக்கத்தில் மேற்கொள்ளவில்லை.
“என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது ஆரம்பக்கல்வித் துறையில் சேர்வதற்கு அது தக்க சமயம் என்று தோன்றியது,” என்றார் இரண்டு மகள்களுக்குத் தாயாரான திருமதி ஷீலா.
கற்பித்தல் துறையில் பட்டயமும் தலைமைத்துவத் துறையில் உயர்நிலைப் பட்டயமும் பெற்றுள்ள இவர், தற்போது தமிழ் மொழி கற்பித்தலில் நிபுணத்துவம் பெற இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகத்தில் படித்து வருகிறார்.
“கற்றலுக்கு வயது ஒரு தடை அல்ல. பாலர் பருவத்தில் குழந்தைகள் நம்மைப் போன்ற ஆசிரியர்களை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். கற்றுகொடுப்பது தரமாக, முறையாக இருப்பது முக்கியம். அப்போதுதான் குழந்தைகளும் சரியான விஷயங்களைக் கற்றுக்கொள்வர். அதற்கு ஆசிரியர்கள் தங்களைத் தேவையான அளவிற்கு மேம்படுத்திக்கொள்வது அவசியம்,” என்றார் திருமதி ஷீலா.
பிசிஎஃப் தலைமையகத்தில் தமிழ் மொழிக்கான பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவிற்குத் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
“குழந்தைகளின் கவனத்தை ஈர்பபதும் மனதில் நிற்கும் அளவிற்குப் பாடங்களைச் சுவாரசியமான முறையில் கற்றுக்கொடுப்பதும் நமது பிரதான நோக்கம்.
“இசை, விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பலதரப்பட்ட உத்திகளைக் கொண்டு தமிழைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்,” என்றார் இவர்.
சிங்கப்பூரில் ஆரம்பக்கல்விக்கான அங்கீகாரம் வளர்ந்து வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கற்பித்தலில் ஆர்வம் உள்ள மேலும் பல இளையர்கள் இத்துறையில் சேர முன்வர வேண்டும் என்றும் இவர் கூறினார்.