வாஷிங்டன்: உலகின் இரு பெரிய பொருளியல் நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று முன்தினம் பகல் வேளையில் சீனா, அமெரிக்கப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்தது. அதைத்தொடர்ந்து, அமெரிக்காவும் சீனப் பொருட்களுக்கு மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ளது.
இருநாடுகளும் மாறி மாறி கூடுதல் வரி விதித்து வரும் நிலையில் வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை என்று கூறப்படுகிறது.
75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா நேற்று முன்தினம் 5 முதல் 10% வரை கூடுதல் வரி விதித்தது. இது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடை முறைக்கு வரும் என்றும் சீனா கூறியது. மேலும் விவசாயப் பொருட்கள், சோயா பீன், மாட்டிறைச்சி மற்றும் சிறிய ரக விமானங்களுக்கும் வரியை உயர்த்துவதாகச் சீனா கூறியது.
அதைத்தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை பங்குச் சந்தை நேரம் முடிவடைந்த பிறகு, அதிபர் டிரம்ப், 250 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு 25 விழுக்காடாக இருந்த வரி, அக்டோபர் 1ஆம் தேதி முதல் 30 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாகச் சொன்னார். இது தவிர, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சீனப் பொருட்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்போவதாகக் கூறி வந்த டிரம்ப், அதை தற்போது 15 விழுக்காடாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில், “சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளைத் திருடுகிறது. அது மிகவும் நியாயமற்ற வர்த்தக முறையையே பின்பற்றுகிறது.
“உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு சீனா தேவையில்லை. சீனா இல்லாமல் அமெரிக்கா மிகவும் நன்றாக இருக்கும்,” என்றார் டிரம்ப்.
மேலும் சீனாவில் இருந்து செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறும் சீனாவுக்கு மாற்றாக மற்றோர் இடத்தைத் தேட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரான்ஸ் வரி விதிக்கப் போவதாக கூறியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பிரெஞ்சு வொயினுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஜி7 மாநாட்டிற்குச் செல்வதற்கு முன் டிரம்ப் சொன்னார்.