ஜோகூரில் கொழுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயை அணைப்பதற்காக தீயணைப்பாளர்கள் கடந்த சில நாட்களாக அரும்பாடுபட்டு வருகின்றனர். இஸ்கந்தர் புத்திரி பகுதியில் வறண்ட பருவநிலை காரணமாக மூண்ட தீ, 16 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது. பலத்த காற்று தொடர்ந்து வீச, 98 ஹெக்டர் அளவுக்குத் தீ பரவியது.
அந்தப் பகுதியைப் பார்வையிட நேற்று ஜோகூர் ஆளுநர் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் சென்றிருந்தார். அங்கே தற்போதைய தீயணைப்பு நடவடிக்கைகளின் நிலவரம் குறித்து அதிகாரிகள் திரு இஸ்மாயிலிடம் தகவல் அளித்தனர்.
இதன் தொடர்பில் அந்த வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியைத் தற்காலிகமாக மூடும்படி திரு இஸ்மாயில் உத்தரவு பிறப்பித்தார். ‘எஸ்எம்கே தஞ்சோங் அடாங்’ என்ற அந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களின் சுகாதாரத்தைக் கருதி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி மூடப்படவேண்டும் என்று ஜோகூர் மன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.
மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட ஆறு மடங்கான தீ, ‘கம்போங் பேகாஜாங்’ காட்டில் பரவத் தொடங்கியது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வரவே ஜோகூரின் தீயணைப்பு, மீட்புப் படையினருக்கு 24 மணிநேரம் எடுத்தது என்று கூறப்படுகிறது.
இந்தப் பயங்கரத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 80 தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பத்து நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பாளர்களுடன் மூத்த அதிகாரிகளும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் 20,000 லிட்டர் தொட்டிகள் கொண்ட ஐந்து தண்ணீர் டாங்கர்கள் தீயை அணைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நீர்க்குழாய்களிலிருந்து காட்டில் தீப்பற்றி எரிகின்ற இடங்களுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல உதவுகின்றன.
இவற்றைத் தவிர, தீயை அணைப்பதற்குச் செயற்கை மழையை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் திரு யஹாயா மாடிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை தீ பரவியிருந்த பகுதியில் 45 விழுக்காட்டுத் தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று சிறிதளவு தூறல் மட்டுமே இருந்தது. தீயணைக்கும் முயற்சிக்கு அவ்வளவாக அது கைகொடுக்கவில்லை. எனவே தற்போதைய நிலையைக் கொண்டு பார்க்கையில் தீயை முழுமையாக அணைக்க நான்கு நாட்கள் எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக திரு யஹாயா கூறினார்.
இதற்கிடையே ‘வெள்ளம்’ முறையில் தீயை அணைக்கும் முறையைக் கையாண்டால் நெருப்பைக் கூடிய விரைவிலேயே அணைத்துவிடலாம் என்றும் அவர் சொன்னார்.