செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 63 வயது ஆடவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக வெளியான தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கோல்கத்தாவின் பாலிகுங்கே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் துகர். இவருக்கு 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அந்த சிகிச்சை இவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றத்தை அளிக்கவில்லை. அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு இவரது இதயம் செயலிழக்கும் நிலைக்குச் சென்றது.
அதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற சந்தோஷுக்கு ‘ஸ்டெம்செல்’ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தச் சிகிச்சை முறையும் பலன் தரவில்லை.
இந்நிலையில், இதய நோய் நிபுணரான டாக்டர் பி.கே.ஹஸ்ராவை சந்தோஷ் அங்கு சந்தித்தார். அந்த மருத்துவரின் பரிந்துரையை ஏற்று செயற்கை இதய கருவியைப் பொருத்திக்கொள்ள சந்தோஷ் சம்மதித்தார்.
2009ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சந்தோஷுக்கு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இதய கருவி பொருத்தப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அந்த இதய கருவியுடன் வாழ்ந்து வருகிறார்.
சந்தோஷின் உடலில் பொருத்தப்பட்ட ‘ஹார்ட்மேட் II’ என்று அழைக்கப்படும் அந்தச் செயற்கை இதய கருவி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கருவியின் விலை ரூ.1 கோடியாக இருந்தது. ஆனால் அதன் விலை தற்போது ரூ.54 லட்சத்துக்கு குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
“நான் இப்போது மற்றவர்களைப்போல மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன். இந்தக் கருவி இல்லையெனில், நான் பிழைத்திருக்க முடியாது,” என்று சந்தோஷ் கூறியுள்ளார்.