அங் மோ கியோ அவென்யூ 10ன் அடுக்குமாடிக் கட்டடம் 446ல் உள்ள நான்காவது மாடி வீட்டில் மூண்ட தீ, “எப்போதாகிலும் நடந்திருக்கக் காத்திருந்த” ஒரு சம்பவம் என இரு குடியிருப்பாளர்கள் நேற்று நியூ பேப்பர் செய்தித்தாளிடம் கூறினர். அந்த வீட்டின் உரிமையாளரான 70 வயதைக் கடந்த மூதாட்டிக்கு முதுமைக்கால மறதிநோய் (டிமென்ஷியா) இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் அவ்வீட்டில் தனியாக வாழ்கிறாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அண்டை வீட்டாரான குமாரி பெனர்டின் காலை 9 மணிக்கு முன்பாக வேலைக்குப் புறப்படவிருந்தபோது, அவரது வீட்டுக்குள் தீப்புகை புகுந்தது.
“அந்த மூதாட்டி தனது வீட்டுக்கு வெளியில் இருந்தார். அவர் பதறிப்போய் அண்டைவீட்டார்களின் கதவுகளைத் தட்டி உதவி கேட்டார்,” என்றார் நிர்வாக உதவியாளரான 43 வயது பெனர்டின்.
அவர் உடனே போலிசாருக்குத் தகவல் கொடுத்தார். அப்போது, அடுத்தடுத்து மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அவர் தெரிவித்தார். தனது வயதான அண்டைவீட்டாருக்கு உதவி கோரி முன்னதாக நகர மன்றத்திற்குக் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“சில சமயங்களில், அவர் நிர்வாணமாகப் பொது நடைவழியில் நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறோம்,” என்றார் அவர்.
அதே கட்டடத்தில் 17 ஆண்டுகளாகத் தனியாக வசித்துவரும் 70 வயது திருவாட்டி சாரா அம்பிகா, மூதாட்டியின் வீட்டைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் தீ மூளக்கூடிய அபாயங்களைக் கவனித்திருப்பதாகக் கூறினார்.
“அவரது வீட்டில் கட்டுக்கட்டாகச் செய்தித்தாட்களையும் மற்ற ஆபத்தான பொருட்களையும் பார்த்திருக்கிறேன். ஒருமுறை தண்ணீர் மீட்டர்மீது மெழுகுவர்த்திகளையும் ஏற்றினார்,” என நியூ பேப்பரிடம் தெரிவித்தார் திருவாட்டி அம்பிகா.
இவரும் இதுபற்றி பல்வேறு பொறுப்பமைப்புகளிடம் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். அண்மை தீச்சம்பவத்தில் சமையலறையில் மூண்ட தீயை இரண்டு நீர்க்குழாய்களைக் கொண்டு அணைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீ மூண்டபோது, கட்டடத்திலிருந்து சுமார் 40 பேர் வெளியேற்றப்பட்டனர். தீயால் யாரும் காயமடையவில்லை. தீ எப்படி மூண்டது என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.
“பாதிக்கப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்குத் தற்காலிக குடியிருப்புடன் உதவி வழங்கப்படுகிறது,” என அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆங் ஹின் கீ கூறினார்.
அண்டைவீட்டார்களின் அக்கறை பற்றி கேட்டபோது, “நாங்கள் கருத்துகளுக்குக் கவனிப்பளித்து, எங்களால் முடிந்தவரை தேவையானவற்றைச் செய்கிறோம்,” என்றார் அவர்.