மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு இடையே முடிவு எட்டப்படாத நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கூடுதல் இடங்களைக் கைப்பற்றிய பாஜக அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. அதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுக்கு விதித்த நிபந்தனைகள் காரணமாக சிவசேனாவும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார்.
இந்தநிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படுவதென முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.