மின்ஸ்கூட்டர் தடை உணவு விநியோகிப்பாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட $7 மில்லியன் தொகுப்புத் திட்டம் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர்களுக்குச் செய்யப்படும் உதவிகளுள் ஒன்று என்றார் அவர். செங்காங் வெஸ்ட் தொகுதியில் உணவு விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேருடன் கலந்துரையாடல் நடத்திய பின்னர் டாக்டர் லாம் செய்தியாளர்களிடம் பேசினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை விளக்க இந்த சந்திப்பு உதவியதாக அவர் கூறினார். மின்ஸ்கூட்டர் தடை என்பது கடினமான முடிவுதான் என்றபோதிலும் நடைபாதைகளில் பாதசாரிகளின் பாதுகாப்புக்கே அரசாங்கம் முன்னுரிமை தருகிறது என்றார் அவர்.
ஆங்கர்வேல் சமூக மன்றத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஊடகத்தினர் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பங்கேற்பாளர்களில் சிலர் செய்தியாளர்களிடம் பேசினர். திடீரென விதிக்கப்பட்ட தடையால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறினர். கலந்துரையாடலில் பங்கேற்ற பலரும் போட்டி போட்டுக்கொண்டு பேச முயன்றதாகக் கூறப்பட்டது.
மின்ஸ்கூட்டரில் இருந்து மின் சைக்கிளுக்கும் சைக்கிளுக்கும் மாறுவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் மின்ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கான தவணை முறை பணம் செலுத்துதல் பற்றியும் கலந்துரையாடலில் பேச அனுமதிக்கப்பட்டு இருந்தது.
“இளைய வயதினரே அதிக வேகத்தில் மின்ஸ்கூட்டரை ஓட்டுவது தெரிய வந்தால் அதற்குரிய வயது வரம்பை 21க்கு உயர்த்த முயன்றிருக்கலாம். ஒட்டுமொத்தத் தடையை தவிர்த்திருக்கலாம்,” என்று முகமது நூரிஸார் சாலே, 35, என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
தினமும் மின்ஸ்கூட்டர் மூலம் தமது மூன்று குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதாகக் கூறிய அவர் நான்காண்டுகளில் ஒரு முறை கூட விபத்தை ஏற்படுத்தியது இல்லை என்றார்.
எதிர்தரப்பு அரசியல் கட்சியான மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங்கும் அங்கு காணப்பட்டார்.
பின்னர் அவர் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிடும்போது மின்சைக்கிளுக்கு மாறச் சொல்வதன் மூலம் உணவு விநியோகிப்பாளர்களின் வாழ்க்கை ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் அவ்வகையான சாதனம் சாலைகளில் கார்களால் மோதப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கியதோடு வந்திருந்தோரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டதாக டாக்டர் லாம் நேற்றுக் காலை தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அந்த நடவடிக்கை அருவருப்பானது, பொறுப்பற்றது என்று டாக்டர் லாம் விமர்சித்து உள்ளார்.